"கத்திப்பாரா மேம்பாலத்தின் மேல் மெட்ரோ ரயில் வழித்தடங்கள்" - மு.க.ஸ்டாலின் ஆய்வு!
சென்னை, கிண்டி, கத்திப்பாரா பகுதியில் மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
இந்த நிலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"சென்னையின் நவீன அடையாளமாக கத்திப்பாரா மேம்பாலத்தை அமைத்தார் கருணாநிதி! அந்த மேம்பாலத்தின் மேல் இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும் பணிகளைப் பார்வையிட்டேன். என்ஜினீயரிங் மார்வெல் என அனைவரும் வியக்க உருவாகி வரும் இது உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.