மகளிர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை அணி - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்கான நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார்.
இதுகுறித்து தவெக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தவெக தலைவர் விஜய் கூறியிருப்பதாவது;
தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம். மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர், கட்சி தொண்டர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்குக் கீழ்க்கண்டவாறு இன்று நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
இதன்படி, மாநில செயலாளராக நாமக்கலை சேர்ந்த விஜயலெட்சுமி, மாநில இணைச் செயலாளராக கடலூரை யாஸ்மின், மாநில பொருளாளராக கோயம்புத்தூரை சேர்ந்த சம்பத் குமார், மாநில துணைச்செயலாளர்களாக மதுரையைச் சேர்ந்த விஜய்அன்பன் கல்லணை மற்றும் சென்னையை சேர்ந்த பிரபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புதிய அணி, கழக உள்கட்டமைப்பைச் சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்குக் கட்சித் தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.