மயிலாடுதுறை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து ரயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் கலந்துக்கொள்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று (மார்ச் 03) மாலை 4.15 மணிக்கு திருச்செந்தூர் விரைவு ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை புறப்பட்டார். அப்போது எழும்பூரில் ரயில் நிலையத்தில் திரண்டிருந்த திமுக தொண்டார்கள் முதலமைச்சரை வழியனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இன்று இரவு 8.15 மணிக்கு சீர்காழி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்குகிறார். இதனையடுத்து நாளை காலை 10 மணிக்கு கார்மூலம் மயிலாடுதுறை சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.