Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம்முடைய தொடர் வெற்றி அமையட்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம்முடைய தொடர் வெற்றி அமையட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11:13 AM Feb 02, 2025 IST | Web Editor
Advertisement

ஈரோடு கிழக்குச் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.5ம் தேதி நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்தன. திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி ஆகியோர் உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

Advertisement

திமுக, நாதக கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்த நிலையில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து,  முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி காலத்திலும், அவர்கள் இருவருக்குப் பிறகும் திமுக எத்தனையோ இடைத்தேர்தல் களங்களைச் சந்தித்திருக்கிறது. தற்போது நடைபெறக்கூடிய ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் என்பது எதிர்பாராத வகையிலும் மனதில் பெரும் சுமையுடனும் எதிர்கொள்ள வேண்டிய களமாக அமைந்துவிட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்றவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவெரா திருமகன்.

அவருடைய அகால மரணத்தைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தையான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களம் கண்டு மாபெரும் வெற்றி பெற்றார். கடந்த டிசம்பர் மாதத்தில் நம் அனைவரின் அன்பிற்குரிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர், தந்தை பெரியாரின் பேரன் திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிர்ச்சி தரத்தக்க மரணத்தால் இந்த இடைத்தேர்தல் களத்தைச் சந்திக்கின்றோம்.

இந்த முறை ஈரோடு கிழக்கில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விரும்பியது மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியும் தீர்மானித்து அறிவித்ததைத் தொடர்ந்து, திமுக-வின் வேட்பாளராக ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களின் அன்பைப் பெற்ற வி.சி.சந்திரகுமார் களமிறங்கியுள்ளார்.

அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் தொகுதியின் ஒவ்வொரு வீடாகச் சென்று கட்சியின் மூன்றரை ஆண்டுகால திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அரசின் சாதனைத் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றிருப்பதால் தங்கள் வாக்குகள் உதயசூரியனுக்கே என்று ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் உறுதியளித்து வருகின்றனர்.

உங்களில் ஒருவனான எனது தலைமையிலான திமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்தின் நலன் சார்ந்த பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும், ஈரோடு மாவட்டத்தின் சிறப்பு மிக்க நெசவுத் தொழில், வணிகம் ஆகியவை வளர்ச்சி பெறும் வகையிலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் ஈரோடு கிழக்குத் தொகுதி பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

அவற்றில் முதன்மையான சில திட்டங்களை இங்கே குறிப்பிடுகிறேன்,

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளை நேரில் கண்டறிவதுடன், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் வெளியிடும் வகையில் உங்களில் ஒருவனான நான் மேற்கொள்ளும் மாவட்டவாரியான ஆய்வுக்கூட்டத்தின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 19 அன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது, புதிய பேருந்து நிலையங்களுக்கான பணிகளின் நிலை, மஞ்சள் ஏற்றுமதி மையம் - மஞ்சள்தூள் உற்பத்தி மையம் ஆகியவற்றின் பணிகள், தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான தொடக்கக் கட்டப் பணிகள், மேலும் சில புதிய பணிகள் ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுசெய்து அவற்றை விரைந்து முடிக்க ஆணையிட்டுள்ளேன்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், இடைத்தேர்தலுக்குப் பிறகு இந்தப் பணிகள் விரைவு பெறும். இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள திமுக அரசின் முன்னோடித் திட்டங்களான மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளி மாணவிகளின் உயர்கல்விக்கான புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கான தமிழ்ப்புதல்வன் திட்டம், விடியல் பயணம் திட்டம், காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல திட்டங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர் முகாம் ஆகியவற்றில் ஈரோடு கிழக்கு தொகுதியைச் சார்ந்த மக்கள் அளித்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கான குடும்ப அட்டைகள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கூடுதலாக துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், சாயக் கழிவுப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு, குப்பைகளைத் தரம் பிரிக்கும் வசதிகள், புதிய மேம்பாலத் திட்டங்கள், மகளிர் அரசுக் கல்லூரி, வேளாண் கல்லூரி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விசைத்தறிப் பயிற்சி மையங்கள், தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிக்கும்போது ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் வைத்துள்ளனர்.

எந்தக் கோரிக்கை வைத்தாலும் அதனை உரிய முறையில் பரிசீலித்து, நிறைவேற்றித் தரக்கூடியதாக திமுக அரசு இருக்கிறது என்ற நம்பிக்கைதான், இந்த அரசின் திட்டங்களின் பயனாளிகளான ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் புதிய கோரிக்கைகளை வைப்பதற்குக் காரணம். திமுக அரசின் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் கழக வேட்பாளருக்கு வழங்கும் மகத்தான ஆதரவு.

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் மீதும், அங்கே தேர்தல் பணியாற்றும் தொண்டர்கள் மீதும் உங்களில் ஒருவனான நான் வைத்திருக்கும் நம்பிக்கையினாலும், என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையினாலும், நான் நேரில் வந்து வாக்கு சேகரித்ததாகக் கருதி, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு பிப்ரவரி 5ம் தேதியன்று உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை அளித்து மகத்தான வெற்றியை அளிக்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

நம்மை வழிநடத்தும் தலைவரும், நம் தலைவர்களுக்கெல்லாம் தலைவருமான பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறும் இடைத்தேர்தலில், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம்முடைய தொடர் வெற்றி அமையட்டும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையில், ‘வெல்வோம் 200 – படைப்போம்’ வரலாறு என்பதற்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் மாபெரும் வெற்றியை எதிர்நோக்குகிறேன், தொண்டர்களின் உழைப்பினாலும், மக்கள் மீது உள்ள நம்பிக்கையினாலும்!"

இவ்வாறு முதலமைச்சரும், திமுக தலைவருமாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article