"ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காக இறுதிவரை போராடியவர் தியாகி இமானுவேல் சேகரனார்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
"ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதிவரை போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன். இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என நமது திராவிட மாடல் அரசின் சார்பில் அவரது நூற்றாண்டையொட்டி அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டுமுதல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இமானுவேல் சேகரனாருக்குப் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற நமது அரசின் மற்றொரு அறிவிப்பும் செயல்வடிவம் பெற்று, இம்மாத இறுதிக்குள் முழுமையடையத் தயாராக உள்ளது. எல்லாருக்கும் எல்லாம் எனும் நம் பயணத்தில் சமத்துவத்துக்கான அவரது போராட்டங்கள் தொடர்ந்து வழிகாட்டும்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.