மநீம கூட்டணி குறித்து புரியாமல் பலர் திரித்து கருத்துக்களை கூறுகிறார்கள் - கமல்ஹாசன் பேட்டி
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அக்கட்சியின் திருச்சி மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் 2026 தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கோள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து கமல் ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் 2026 தேர்தல் குறித்து ஆலோசனை செய்தோம். பூத் கமிட்டி குறித்தும் ஆலோசனை செய்தோம். எங்கள் கூட்டணி கட்சிகளின் பெருமையும் அதனால் ஏற்படப்போகும் நன்மையை குறித்தும் எடுத்துரைத்தேன். ஏன் கூட்டணி என்பது குறித்து விளக்கி உள்ளேன். நாங்கள் வைத்துள்ள கூட்டணி குறித்து புரியாமல் பலர் திரித்து சில கருத்துக்களை கூறுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, "எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து உங்களிடமா பேசுவது?" என்று பதிலளித்துவிட்டு அவர் சென்றார்.