தமிழகத்தில் களைகட்டிய மகா சிவராத்திரி விழா - சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள் !
நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மகா சிவராத்திரியையொட்டி நேற்று இரவு தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி அனைத்து சிவாலயங்களிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் முதல் ஜாமம் பூஜை நேற்று மாலை 6 மணி முதல் இரவு 9மணி வரையும் , இரண்டாம் ஜாமம் பூஜை இரவு 9 மணி முதல் 12 மணி வரையும், மூன்றாம் ஜாமம் பூஜை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையும், நான்காம் ஜாமம் பூஜை அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை என 4 கால பூஜைகள் நடைபெற்றது. மேலும் கோயில்களில் பக்தர்கள் வாங்கிக் கொடுக்கும் அபிஷேக பொருட்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஜாமத்திலும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த நிலையில் மகா சிவராத்திரி விழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவை பட்டீஸ்வர சாமி கோவில், நெல்லையப்பர் கோவில், ஸ்ரீரங்கம் ஜம்புகேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில், சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.