மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம் - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர். மீனாட்சி அம்மன் கோயிலில், மே 8ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
அதனை தொடர்ந்து மே.9ம் தேதி மீனாட்சி திருத்தேரோட்டம், தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு என பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், மீனாட்சியம்மன் திருக்கோயிலில் திருவிழா முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திருவிழா முன்னேற்பாடு பணிகள் மற்றும் திருக்கல்யாண நிகழ்வுக்காக நடைபெற்று வரும் முன்னேற்பாட்டு பணிகள், பக்தர்கள் இருக்கைகள், அடிப்படை வசதி உள்ளிட்டவைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மீனாட்சியம்மன் கோயில் தக்கார், மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து திருவிழாவில் கலந்து கொள்ள உள்ள பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தர வேண்டும், எந்த ஒரு இடையூறும் இல்லாமல் திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டும் என கோயில் நிர்வாக ஊழியர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுரைகளை வழங்கினார்.