மக்களவைத் தேர்தல்: தமிழ்நாடு வருகிறது துணை ராணுவம்!
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவம் தமிழ்நாடு வருகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக, அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதேபோல் எதிர்க்கட்சியான அதிமுகவில் இன்னும் கூட்டணி எதுவும் உறுதியாகவில்லை. தேர்தல் குறித்த அறிவிப்பு வந்த பிறகே கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அதிமுக தொடர்ந்து கூறி வருகிறது. அதேநேரம் கூட்டணியை இறுதி செய்ய பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவம் தமிழ்நாடு வருகிறது. 200 கம்பெனி துணை ராணுவத்தினர் மார்ச் முதல் வாரத்தில் வருகை தர உள்ளனர் என தமிழ்நாட்டு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும், கடந்த தேர்தலில் 160 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.