மக்களவைத் தேர்தல் | வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் நாளை (ஏப்.19) நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கு 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், அந்தந்த தொகுதிகளுக்கு இன்று காலை முதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த இயந்திரங்கள் அந்தந்த தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்படுகின்றன. பதற்றமான வாக்குச் சாவடியாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.