“நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக இருப்போம்” - தவெக தலைவர் விஜய் பதிவு!
இலங்கையில் கடந்த 2009 ஆண்டு நடந்த உள்நாட்டு போரின்போது, ஏராளமான இலங்கை தமிழர்கள் உயிரிழந்தனர். முள்ளிவாய்க்காலில் நடந்த இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று(மே.18) தவெக சார்பில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த இலங்கை தமிழர்களை நினைவுகூரும் விதமாக, மெலுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உயிரிழந்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வீரவணக்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம். மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும். மாமக்கள் போற்றுதும்! மாவீரம் போற்றுதும்!”
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.