கொல்கத்தா மாலில் திடீர் தீ விபத்து - அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்!
கொல்கத்தாவில் உள்ள ஒரு மாலில் தீடிரென தீப்பற்றியதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கத்தால் தீ விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. கடந்த புதன்கிழமையன்று குவைத் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று கொல்கத்தாவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அக்ரோபோலிஸ் என்ற மாலில் இன்று திடீரென தீப்பற்றியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இது வரை வெளியாகவில்லை என்றாலும் உள்ளே இருக்கும் மக்களை காக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கட்டடம் முழுவதும் புகை பரவியுள்ளதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த மக்கள் அங்கும், இங்கும் ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.