போதைப் பொருள் சோதனையின்போது தப்பியோட்டம் - குட் பேட் அக்லி பட நடிகருக்கு கொச்சி போலீஸ் நோட்டீஸ்!
கேரளா மாநிலத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அம்மாநில அரசும் காவல்துறையும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் முக்கியமான நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்கள் , கல்லூரி வளாகங்கள் ஆகியவற்றில் கேரள போலீசார் சோதனையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று ந்கொச்சியில் உள்ள ஹோட்டலில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி அதிரடியாக சென்று சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்
அப்போது சம்பந்தப்பட்ட ஹோட்டலின் 3-வது மாடியில் இருந்து ஒருவர் தப்பித்து ஓடுவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவர் யார்? என விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தப்பியோடிய நபர் பிரபல நடிகரான ஷைன் டாம் சாக்கோ என தெரியவந்தது. இதனை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் உறுதிப்படுத்தினர்.
இவர் மலையாளத்தில் பல முன்னணி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி உள்பட பல படங்களில் ஷைன் டாம் சாக்கோ நடித்துள்ளார். இவர் ஏன் போலீசாரை கண்டு தப்பி ஓடினார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இது தொடர்பாக நடிகருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைக்கவும் கொச்சி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஹோட்டலில் இருந்து தப்பியோடிய சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.