கேரளா | கடலில் குளித்த இரு ஏமன் நாட்டு மாணவர்கள் மாயம்!
ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள் ஜிப்ரான் ( 24), அப்துல் சலாம் (23). இவர்கள் இருவரும்
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் சக நண்பர்களுடன் சேர்ந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் ஞாரைக்கல் அருகே உள்ள வளப்பு கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர்.
அவர்கள் நேற்று அங்குள்ள கடலில் குளிக்க சென்றனர். அப்போது கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், அங்கிருந்த மீனவர்கள் கல்லூரி மாணவர்களை கரைக்கு வருமாறு சத்தம் போட்டு எச்சரித்ததாக தெரிகிறது.
இதை கேட்காமல் ஏமன் நாட்டு மாணவர்கள் இருவரும் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது, கடல் அலை அவர்களை அடித்துச் சென்றது. பின்னர் 2 பேரும் கடலில் மூழ்கி மாயமாகினர். உடனடியாக அங்கிருந்த மீனவர்கள் இதுகுறித்து கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில், கடலோர பாதுகாப்பு படையினர் மறிறும் தீயணைப்பு துறையினர் மாயமான இரு மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து ஞாரைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் மூழ்கி மாயமான கல்லூரி மாணவர்களை படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.