பார்க்கிங் பிரச்னைகளை சமாளிக்க கேரள அரசு புதிய முயற்சி! என்ன தெரியுமா?
மாநகரங்களில் ஏற்படும் பார்க்கிங் பிரச்னைகளை குறைக்க முன்கூட்டியே பதிவு செய்யும் பார்க்கிங் மொபைல் செயலி ஒன்றை கேரள அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாநிலத்தின் முக்கிய நகரங்களில் வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லாமல் ஏற்படும் பார்க்கிங் பிரச்னைகளை தவிர்க்க, மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்த கேரள அரசு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொச்சி பெருநகர காவல் ஆணையம் தலைமையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த செயலியின் மூலம் வாகனம் நிறுத்தும் இடத்தை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். இந்த முன்பதிவிற்கு கட்டணம் உண்டு.
ரூ. 5 கோடி மதிப்பீட்டில் எர்ணாகுளம் மாவட்டத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து வழங்குகின்றன. இந்த மொபைல் செயலி இன்னும் ஆறு மாதங்களில் செயல்பாட்டிற்கு வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த செயலியில் தனியார் பார்க்கிங் வசதிகளும் இணைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்க பார்க்கிங் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
இந்த செயலி பார்க்கிங் சேவைகள், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.