“யாராவது பேசும்போது மட்டும் கன்னட பற்று தோன்றக்கூடாது” - கமலுக்கு ஆதரவு குரல் எழுப்பிய சிவராஜ்குமார்!
தக் லைஃப் படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கமல்ஹாசன் தமிழ் மொழியில் இருந்து கன்னடம் மொழி தோன்றியது என்ற கருத்தை தெரிவித்தார். இது குறித்து கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, கன்னட மொழியின் நீண்ட வரலாறு கமலுக்கு தெரியாது என்று பதில் கொடுத்தார். மேலும் சில அமைப்புகள் கமல்ஹாசன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கமல்சாஹன் மன்னிப்பு கோரவில்லை என்றால், தக் லைஃப் படத்தின் வெளியீட்டை தடை செய்வோம் என மிரட்டல் விடுத்தனர்.
தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன், சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றும் நான் அன்பினால் தான் அப்படி சொன்னேன் என்றும் கூறினார். அத்துடன் அரசியல்வாதிகளுக்கு மொழியைப் பற்றி பேச தகுதியில்லை, நான் உள்பட இத்தகைய மிக ஆழமான விவாதங்கள் அனைத்தையும் வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொழி நிபுணர்களிடம் விட்டுவிடுவோம் என்று விளக்கம் கொடுத்தார்.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகர் சிவராஜ் குமார் குரல் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது, “ கமல்ஹாசன் எப்போதும் கன்னடத்தைப் பற்றி உயர்வாகப் பேசுவார், பெங்களூருவைப் பற்றி மிகுந்த அபிமானத்தை வெளிப்படுத்துவார். அவர் நமது நகரத்தைப் பற்றி பெருமையுடன் பேசுவார். நாம் அவரைப் பார்த்து வளர்ந்தர்கள், நான் பல வருடங்களாக கமல் சாரின் தீவிர ரசிகன். நான் அவரைப் பெருமையாக பேசுவது என் தந்தையை பற்றி பேசுவது போன்றது. அவர் நேற்று நம்மிடையே இருந்தபோது ஏதேனும் வருத்தம் இருந்தால் நேரடியாக கேட்டிருக்கலாம். ஆனால், அவ்வாறு யாரும் கேட்கவில்லை. அப்போது மக்கள் ஏன் அமைதியாக இருந்தார்கள் என்று தெரியவில்லை.
யாராவது பேசும்போது மட்டும் கன்னட பற்று தோன்றக்கூடாது. அது எப்போதும் மனதில் நிலையாக இருக்க வேண்டும். நான் எல்லா ஊடக சேனல்களுக்கும் இதைச் சொல்கிறேன். ஏதேனும் இப்படிப்பட்ட நிகழ்வின்போது மட்டும் கன்னட பற்றை வெளிப்படுத்தாமல், அதே ஆர்வத்தை எப்போதும் காட்டுங்கள்.
கன்னடத்திற்கான நமது அர்ப்பணிப்பு வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும். தேவைப்பட்டால், கன்னடத்திற்காகப் போராடவும் என் உயிரைக் கூடக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன். கேமராக்கள் முன்பு மட்டும் கன்னடத்தைப் பற்றிப் புகழ்ந்து பேசுவது போதாது. வார்த்தைகளை விட செயல்கள்தான் முக்கியம். கன்னட சினிமாவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? புதுமுகங்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளீர்களா? கன்னடம் வளர வேண்டும் என்று நாம் உண்மையிலேயே விரும்பினால், அதை எல்லா வழிகளிலும் ஆதரிப்பது நமது கடமை” இவ்வாறு அவர் கூறினார்.