கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்!
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் 37 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு எதிர்க் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே விஷச்சாராயம் விற்பனை செய்த கன்னுக்குட்டி என்பவரும் அவரது மனைவியும் கைதாகியுள்ளனர். அதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், சிகிச்சையில் இருப்பவர்களுக்கு 50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
அதனுடன் கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும் அவர் வழங்கினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.