“தாமதமான நீதி அநீதிக்கு சமம்” - செய்யாத தவறுக்காக 48 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நபர்... 104 வயதில் விடுதலை!
இந்திய நீதித்துறை வரலாற்றில் விடுவிக்கப்பட்டவர்களில் மிகவும் வயதானவர்களின் பட்டியல், என ஒரு தனிப்பட்டியல் போடப்பட்டால் அதில் முதல் பெயராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த லக்கன் சரோஜ் என்பவரின் பெயர் இடம்பெறும்.
உத்தரப்பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜ், 1977 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு, இறுதியாக 104 வயதில் விடுதலை ஆகியுள்ளார். தங்கள் தந்தை குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க பல கஷ்டங்களையும் தாங்கி கொண்டுள்ளனர், இவரின் ஐந்து மகள்களும்.
லக்கானின் வாழ்க்கையையே மாற்றிய சம்பவம் ஆகஸ்ட் 16, 1977 அன்று நடந்தது. கிராமத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக இருந்த பகை வன்முறையாக மாறி மோதலில் முடிந்தது. இந்த மோதலில் பிரபு சரோஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். இந்த கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லக்கன் சரோஜ் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பின்னர் இந்த வழக்கில் மூவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால் பிரயாக்ராஜில் உள்ள அமர்வு நீதிமன்றம் 1982இல் வழக்கை விசாரித்து, மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இருப்பினும், சட்ட செயல்முறை பற்றிய அறிவு குறைவாலும், தன்னிடம் போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் லக்கான் காலத்தின் பிடியில் சிக்கினார்.
இதற்கிடையே அவர்மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிக்க அவரின் 5 மகள்களும் போராடி வந்தனர். வழக்கிற்காக பல வழக்கறிஞர்களை நாடியுள்ளனர். ஆனால் பலர் காசை வாங்கிவிட்டு ஏமாற்றி சென்றுள்ளனர். கிட்டத்தட்ட 5 சதாப்தங்களுக்கு பிறகு, மே 2, 2025 அன்று, அலகாபாத் உயர் நீதிமன்றம் குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாதது மற்றும் பல நடைமுறை முறைகேடுகளைக் சுட்டிக்காட்டி அவரை விடுதலை செய்தது. ஆனால் மீண்டும் பல சட்ட நடைமுறைகளால் இந்த விடுதலை மேலும் 20 நாட்களுக்கு தாமதமானது. உடல்நிலை மோசமான நிலைகளிலும் சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே இவருடன் கைதான இருவரும் சிறையிலேயே உயிரைவிட்டனர்.
இதுதொடர்பாக அவரின் மகள் தேவி பேசியதாவது;
“நாங்கள் அவதூறுகளாலும், கொலைகாரனின் குழந்தைகள் என்ற முத்திரையாலும் அடையாளம் காணப்பட்டோம். கொலைக்காரன் என்ற களங்கப்பெயருடனே என் அப்பா இறந்துவிடுவாரோ என அச்சப்பட்டேன். நாங்கள் வளர வளர எங்கள் அப்பா குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே எங்கள் வாழ்க்கையின் ஒரே நோக்கமாக மாறியது. அவரது பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன், நாங்கள் ஐந்து பேரும் எங்களால் முடிந்த எல்லா வழிகளிலும் அவருக்கு ஆதரவாக நின்றோம்.
என் சகோதரன் ஒருபோதும் அப்பாவை பற்றி கவலைப்படவில்லை. நாங்கள்தான் அப்பாவை கவனித்துக் கொண்டோம், நீதிமன்றத்திற்குச் சென்றோம், வழக்கறிஞர்களுக்கு பணம் கொடுத்தோம். நாங்கள் பிறப்பதற்கு முன்பே இந்த வழக்கு தொடங்கியது. ஆனால் அதுதான் எங்களின் வாழ்க்கையாக அமைந்தது” என தெரிவித்தார்.
தனது விடுதலை குறித்து லக்கன் சரோஜ் பேசியதாவது;
“இந்த நாளைப் பார்ப்பதற்கு உயிருடன் இருப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. என் மகள்கள் என் அப்பாவித்தனத்தை நம்பினர். அவர்கள் எனது சட்டப் போராட்டம் முழுவதும் என்னுடன் நின்றனர்," என்று கண்களில் பல உணர்ச்சிகள் வெளிவர பேசினார். விடுதலைக்குப் பிறகு எப்படி உணருகிறீர்கள் என்ற கேள்விக்கு, ஆழமான புன்னகையுடன், எனக்கு வயது 80ஆ அல்லது 104-அ என்பது முக்கியமல்ல. நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
விடுதலையைத் தொடர்ந்து மகள்களின் வீடுகளில் தனது கடைசி காலத்தை கழிக்கிறார்.