ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை - 2வது முறை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கடந்த 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. இதில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து 2வது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த ஜனவரி 18ஆம் தேதி தொடங்கியது.
மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் மற்றும் சூப்பர் 6 சுற்று ஆட்டங்களின் முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தையும், தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று பகல் 12 மணிக்கு கோலாலம்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில், 10 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக மீகே வான் வூர்ஸ்ட் 23 ரன்களை அடித்தார். இந்திய அணி தரப்பில், வீராங்கனை கொங்காடி த்ரிஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார். அதே நேரம் இந்தியாவின் பருணிகா சிசோடியா, தென்னாப்பிரிக்காவின் சிமோனை கிளின் போல்ட் செய்தார்.
இதனையடுத்து 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, இலக்கை எட்டி சாதனை படைத்தது. 11.2 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கொங்கடி த்ரிஷா 44 ரன்களும், சானிகா சால்கே 26 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மோனாலிசா லெகோடி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.