திரும்ப பெறப்பட்டது ஜாக்டோ - ஜியோ ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பு...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம், தொடர்ந்து பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ - ஜியோ அறிவித்திருந்தது.
இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஸ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
அரசின் நிதி நிலைமை சரியானவுடன் கோரிக்கை நிறைவேறப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் கோரிக்கையையும் ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் நிராகரித்தனர். மேலும், திட்டமிட்டபடி அடையாள வேலைநிறுத்தமும், காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தமும் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.
இதனிடையே, நாளை அலுவலகம் வராதவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில்சந்தித்தனர். அப்போது தங்கள் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். இதைத் தொடர்ந்து போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்தனர்.