"பெரியாரின் சமூகநீதி ; மோடியின் வெறுப்புணர்வு இவை இரண்டிற்கு இடையேயான தேர்தல் இது" - நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு
"பெரியாரின் சமூகநீதி ; மோடியின் வெறுப்புணர்வு" இவை இரண்டிற்கு இடையேயான தேர்தல் இது என நெல்லையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி , சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் , விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், ராமநாதபுரம் ஐ யூ எம் எல் வேட்பாளர் நவாஸ்கனி, தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் மற்றும் கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உள்ளிட்ட 8 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் , வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பேசியதாவது..
“எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்து கொள்ள விரும்புகிறேனோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டை பார்க்கிறேன்;பெரியார், அண்ணா, காமராஜர் போன்ற ஆளுமைகளை தந்த மாநிலம் தமிழ்நாடு ;சமூக நீதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தமிழ்நாடு ஒரு முன்னுதாரணம், அதனால் தான் இந்திய ஒற்றுமை பயணத்தை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன்.
ஒருபுறம் பெரியார் உள்ளிட்டோர் போதித்த சமூகநீதி, மறுபுறம் மோடியின் வெறுப்புணர்வு, இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடைபெறும் தேர்தல் இது. எதிரணியில் இருப்பவர்கள் ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற சித்தாந்தத்தில் உள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து கலாச்சாரங்களும் காக்கப்பட வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைப்பாடு.
தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல் நடைபெறுகிறது. தமிழ் மொழி மீதான தாக்குதலை தமிழர்கள் மீதான தாக்குதல் என்றே பார்க்கிறேன். அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் வேண்டும்.” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.