“எங்களுடன் கூட்டணி வைக்கவே விஜய் கட்சித் தொடங்கியது போல் தோன்றுகிறது” - விசிக எம்பி ரவிக்குமார்!
“புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை பார்த்தால், விசிகவுடன் கூட்டணி வைக்கவே கட்சி தொடங்கியது போல் எண்ணத் தோன்றுகிறது” என விசிக துணைப் பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
விகடன் பிரசுரம் மற்றும் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் புத்தகத்தை வெளியிட, ஓய்வுபெற்ற நீதியரசர் கே. சந்துரு உடன், ஆனந்த் டெல்டும்டேவும் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பேசிய விஜய் விசிக தலைவர் திருமாவளவனை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க விடாமல் அவருக்கு கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுத்ததாக பேசியிருந்தார்.
மேலும் திருமாவளவன் குறித்தும், திமுகவை மறைமுகமாக சாடியும் பேசியிருந்தார். இந்நிலையில் விசிக எம்பியும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ரவிக்குமார் விஜய்யின் பேச்சு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
“எழுச்சித் தமிழர் திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும்கூட, விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்து விட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து ‘அழைப்பு’ விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
இதையெல்லாம் பார்க்கும் எவரும், ரஜினிகாந்தை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான் அவர் உடன்படாததால் விஜய்யை கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளவார்கள் . ‘விஜய், மணிப்பூரைப் பற்றிக் குறிப்பிட்டாரே’ என்று அப்பாவியாகக் கேட்பவர்கள் அந்த மேடையில் இருந்த நீதிபதி கே.சந்துருவிடம் Alibi என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.