“அனுமதி மறுப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது” - கிருஷ்ணசாமி தொடர்ந்த மனுவிற்கு காவல்துறை பதில்!
அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2024 நவம்பர் 7ஆம் தேதி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணியாக சென்று தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது, முந்தைய நாளான 2024 நவம்பர் 6ஆம் தேதி அனுமதி மறுத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்ததால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவுக்கு திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், போராட்டத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்த போது, அது தொடர்பாக பல்வேறு விவரங்களை அளிக்குமாறு கேட்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கு எந்த பதிலும் அளிக்காததால் தான், பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும்;
மேலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் அனுமதியின்றி, பேரணி நடத்த அனுமதி அளித்தால் மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அனைவரும் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பேரணி நடைபெறாததால் ஏற்பட்ட பாதிப்புக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது எனவும், இதற்கு காவல்துறை எந்த விதத்திலும் பொறுப்பல்ல எனவும், பொது மக்களின் நலன் கருதியே பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல் துறையின் இந்த பதில் மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.