காஸா முழுவதும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் - குழந்தைகள், பெண்கள் உட்பட 66 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல் - காஸா இடையே கிட்டதட்ட 19 மாதங்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து வருகிறது. காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
இந்நிலையில் தெற்கு காஸா பகுதியில் உள்ள அல்-மவசியில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இன்று அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் காயமடைந்ததாகவும் சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல் தெரிவித்தார்.
வடக்கு காஸாவின் ஜபாலியாவில் உள்ள வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக பஸ்ஸல் கூறினார். அதே நேரத்தில் அதே பகுதியில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை சேதமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் அல்-ஜவாய்தாவின் மையப் பகுதியிலும், தெற்கில் உள்ள கான் யூனிஸிலும் இறப்புகள் பதிவாகியுள்ளதாக பஸ்ஸல் தெரிவித்தார்.
இருப்பினும் இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனிடையே காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழித் தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது.