ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவா? | வீட்டை சுற்றி 144 தடை உத்தரவு!
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பணமோசடி வழக்கில் கடந்த வாரம் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதில், ஜனவரி 29 அல்லது 31ம் தேதிகளில் விசாரணைக்கு நேரம் ஒதுக்குமாறு வலியுறுத்தப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறைக்கு ஹேமந்த் சோரன் எழுதியிருந்த பதில் கடிதத்தில், “ஜார்கண்ட் மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையில் நடைபெறும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அந்த காலகட்டத்தில் அரசின் முக்கிய பிரதிநிதிகள் அனைவரும் கட்டாயம் அந்த கூட்டத்தொடரில் பங்கேற்பார்கள்.
அப்படி இருக்கையில் 31 ஜனவரி 2024 அன்று அல்லது அதற்கு முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்துவது, மாநில அரசாங்கத்தின் செயல்பாட்டை சீர்குலைக்கும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி தனது அதிகாரப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுக்கும், உங்களது அரசியல் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது” என ஹேமந்த் சோரன் தெரிவித்து இருந்தார்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், அவரின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றின் 100 மீட்டர் சுற்றளவிற்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு இரவு 10 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளில் எந்த விதமான போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.