ரசிக்க வைக்கிறதா? ‘மெட்ராஸ் மேட்னி’ ஷோ - திரை விமர்சனம்!
ஆட்டோ டிரைவரான காளி வெங்கட் தனது மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார். மகனை லோன் வாங்கி நல்ல காலேஜில் படிக்க வைக்க நினைக்கிறார். என்ன நடந்தது என்பதை எளிய மக்களின் பார்வையில் பதிவு செய்கிறது மெட்ராஸ் மேட்னி கதை.
தமிழ் சினிமாவில் எத்தனையோ அப்பா மகள், அப்பா மகன் பாசக்கதைகள் வந்துள்ளன. ஆட்டோ டிரைவர் வாழ்க்கையை முன்னிறுத்தி பல படங்கள் வந்துள்ளன. ஆனால், கார்த்திகேயன் மணி இயக்கிய மெட்ராஸ் மேட்னி அதிலிருந்து வேறு பட்டது. மனதை தொடுகிறது, கண் கலங்க வைக்கிறது. காரணம், படத்தில் சொல்லப்படும் விஷயங்கள், லோயர் மிடில் கிளாஸ் மனிதர்கள் வாழ்க்கை, அந்த கேரக்டரில் சிறப்பாக நடித்தவர்களின் நடிப்பு என பல காரணங்கள்.
சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டே மகளை படிக்க வைக்கிறார் காளிவெங்கட், அவர் மகளான பாரதிகண்ணம்மா புகழ் ரோஷினிஹரிபிரியனுக்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. அவளுக்கு வரன் தேடுகிறார். அதில் நிறைய பிரச்னைகள். இதற்கிடையில் மகனுக்கு காலேஜ் சீட் வாங்க, லோன் வாங்க லோவென அலைகிறார். இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையில் அவருக்கு இன்னும் பல பிரச்னைகள். மின் வாரிய அதிகாரியுடன் சண்டை வருகிறது. விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது. காளிவெங்கட் பிரச்னைகளில் இருந்து மீண்டாரா? என்பது ஒரு பார்வை. ஒரு ஆட்டோகாரனாக, பொறுப்புள்ள அப்பாவாக, குடும்பத் தலைவனாக வாழ்ந்து இருக்கிறார் காளிவெங்கட், படம் பார்ப்பவர்கள் பலருக்கு தங்கள் அப்பா நினைவு வரும், கண்கலங்கும். அவருக்கு விருதுகள் கொடுத்து பாராட்டலாம்.
சின்ன வயதில் இருந்து தாழ்வு மனப்பான்மையுடன், அவமானங்களுடன் வளர்கிறார் ரோஷினி. அவருக்கும், அவர் பாட்டிக்குமான பாசம், அப்பா, அம்மாவின் இயலாமை, தம்பியின் விளையாட்டுதனம், பெண் பார்க்க வருபவர்களின் பந்தா என பல விஷயங்களை எப்படி சமாளிக்கிறார் என ரோஷினி கேரக்டர் நகர்கிறது. மேக்கப் இல்லாவிட்டாலும் அவர் நடிப்பு, அவர் கேரக்டர் அழகு. அவர் தம்பியாக வரும் விஷ்வா இன்றைய இளைஞர்களை நினைவுப்படுத்துகிறார். இன்ஸ்டா, காதலி, நாய், கோபம் என மிளிர்கிறார். அவருக்கும், மின்சார வாரிய அதிகாரிக்குமான சண்டை மனதில் நிற்கிறது.
இவர்களை தவிர, அம்மாவாக நடித்த ஷெல்லி, நம் குடும்பங்களில் பார்க்கும் நிஜ அம்மாவாக, பிரச்னைகளுடன் வாழும் குடும்பத்தலைவியாக அப்படி இருக்கிறார். சின்ன சீனில் கூட, சின்ன கண் அசைவால், நடிப்பால் கவர்கிறார். கணவன், மகள், மகனுடன் அவர் படுகிற பாடு, பாசம் சூப்பர். கண்களில் பல மொழி பேசுகிறார்
கவுன்சிலராக வந்து காமெடி பண்ணுகிறார் கீதா கைலாசம், ஊறுகாய்காரராக வருகிறார் சாம்ஸ். மின்சாரி வாரிய அதிகாரியாக சுனில், அவர் உதவியாளராக மதுமிதா, கார் ஓட்டும் பயிற்சியாளராக ஜார்ஜ் பல கேரக்டர்கள் கதையை நகர்த்த உதவுகிறார்கள். எழுத்தாளராக கதை சொல்கிறார் நடிகர் சத்யராஜ். கே.சி
பாலசாரங்கன் இசை, வடிவேலு பாடிய பாடல் அருமை. சினிமாத்தனம் இல்லாமல் அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளாார் ஆனந்த் ஜி.கே.
ரோஷினியை பெண் பார்க்கிற சீன், நாய் அடிபடும் சீன், மின்வாரிய சண்டை, தம்பி காணாமல் போகும் சீன், அப்பா குப்பை அள்ளுகிற சீன் லோன் கேட்டு செல்லும் சீன் என கவிதை மாதிரி பல சீன்களை தந்து இருக்கிறார் புதுமுக இயக்குனர் கார்த்திகேயன் மணி. கதையில் அவர் சொல்கிற விஷயமும் நச்.
சத்யராஜ் கதை சொல்லும் போக்கு சில இடங்களில் போராடிக்கிறது. சற்றே மெதுவாக கதை நகர்கிறது என சிலகுறைகள் இருந்தாலும், உணர்வுகளை சொல்லும் இடத்தில், லோயர் மிடில் கிளாசை சேர்ந்த ஒரு குடும்பத்தலைவன், தலைவி மனநிலையை காண்பிக்கும் இடத்தில், இன்றைய மகள், மகன்களின் மனநிலையை சொல்லும்வகையில் மெட்ராஸ் மேட்னி ரசிக்க வைக்கிறது. ஒரு நல்ல சிறுகதை படித்த உணர்வை படம் தருகிறது. பண, மன பிரச்னைகள் வந்தாலும் வாழ்க்கை இப்படிதான், போராடினால், விட்டுக்கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற பாசிட்டிவ் உணர்வை தருகிறது.
- மீனாட்சிசுந்தரம், சிறப்பு செய்தியாளர்