ஐபிஎல் | ஹைதராபாத்தை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது மும்பை!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டுகளும், ஹார்டிக், பும்ரா, ட்ரெண்ட் போல்ட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கெல்டன் - ரோகித் சர்மா ஆகியோர் களம் கண்டனர். இதில் ரோகித் சர்மா 26 ரன்களிலும், ரியான் ரிக்கெல்டன் 31 ரன்களிலும் வெளியேறினர். இவர்களை அடுத்து ஆடிய வில் ஜாக்ஸ் 36 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் ஹர்திக் பாண்டியா 21 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் 18.1 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. திலக் வர்மா 21 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஈஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.