Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய பல்கலைக்கழகங்களில் இனி ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை!

09:54 PM Jun 11, 2024 IST | Web Editor
Advertisement

உலகளாவிய நடைமுறைக்கு ஏற்ப இனி இந்தியாவிலும் ஆண்டுக்கு இருமுறை, பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

‘இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், இனி ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை வழங்க அனுமதிக்கப்படும்’ என்று பல்கலைக்கழக மானியக் குழுவின்(யுஜிசி) தலைவர் ஜெகதேஷ் குமார் இன்று தெரிவித்துள்ளார். இது பள்ளிகளின் தேர்வு முடிவு அறிவிப்பதில் தாமதம், உயர்கல்வியில் சேர்வதில் மாணவர்களின் தடுமாற்றம், அவர்களின் உடல்நலன் பாதிப்பு உள்ளிட்ட தனிப்பட்ட பிரச்னைகளால் தவிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, “2024-25ம் கல்வியாண்டு முதல், ஜூலை-ஆகஸ்ட் மற்றும் ஜனவரி-பிப்ரவரி என இரு சேர்க்கை சுழற்சிகள் நடைமுறைக்கு வருகின்றன. உலகளவில் முன்னணி கல்வி நிறுவனங்கள் இந்த வகையிலான ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை நடைமுறையை ஏற்கனவே பின்பற்றி வருகின்றன. இந்திய உயர் கல்வி நிறுவனங்களும் இத்தகைய சேர்க்கை சுழற்சியை ஏற்றுக்கொண்டால் நமது உயர் கல்வி நிறுவனங்கள், சர்வதேச கல்வி நிறுவனங்களுடனான ஒத்துழைப்பையும் மாணவர் பரிமாற்றத்தையும் மேம்படுத்த முடியும். இதன் விளைவாக, நமது உலகளாவிய போட்டித்தன்மை மேம்படும். மேலும் உலகளாவிய கல்வித் தரங்களுடன் இணைய வாய்ப்பாகும்” என யுஜிசி கருதுகிறது.

இந்தியாவில் பள்ளிக்கல்வியை முடிக்கும் மாணவர்களில் கணிசமானோர் உயர்கல்வி வாய்ப்பை தவற விடுகின்றனர். அதிலும் பெரும்பாலான பெண்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகிறது. யுஜிசியின் புதிய மாற்றத்தின் மூலம் உயர்கல்வியைப் பெறுவது மேலும் இலகுவாகிறது. இதனால் உயர்கல்வியில் சேர்ந்து பயனடைவோர் எண்ணிக்கையும், அதில் பாலின சமத்துவமும் அதிகரிக்கக்கூடும்.

மேலும், “தற்போதைய சுழற்சியில் சேர்க்கையைத் தவறவிட்ட மாணவர்கள் தங்கள் உயர்கல்வி சேர்க்கைக்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டியதில்லை. புதிய சேர்க்கை நடைமுறை மூலம், தொழில் நிறுவனங்களும் தங்கள் வளாக நேர்காணல் மற்றும் ஆட்சேர்ப்பை ஆண்டுக்கு 2 முறை மேற்கொண்டு வேலைவாய்ப்பை மேம்படுத்தலாம். இந்த வகையிலும் பட்டதாரிகள் பெரும் பயன்பெறுவார்கள்” எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நடைமுறை கட்டாயமில்லை என்றும், தேவையான உள் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது. அதிகாரபூர்வ முழுமையான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

Tags :
AdmissionNews7Tamilnews7TamilUpdatesUGCuniversity
Advertisement
Next Article