பாகிஸ்தான் மைதானத்தில் ஒலித்த இந்திய தேசிய கீதம் - வைரலாகும் வீடியோ!
2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகின்றன. இத்தொடரில் 8 அணிகள் விளையாடி வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் இன்று லாகூரில் நடைபெற்று வரும் 4-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதனிடையே இங்கிலாந்து அணியின் தேசிய கீதம் ஒலிக்கப்படுவதற்கு பதில் பாகிஸ்தானில் இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
போட்டி ஆரம்பிக்கும் முன்பு களத்தில் ஆடும் அணிகளின் தேசிய கீதம் ஒலிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று இங்கிலாந்து அணியின் தேசிய கீதம் ஒலிப்பதற்கு பதிலாக இந்தியாவின் தேசிய கீதம் ஒலித்தது.
சிறிது நேரம் பாடல் ஒலித்த பிறகு சுதாரித்த கொண்ட டிஜே, இந்திய தேசிய கீதத்தை நிறுத்தி விட்டு இங்கிலாந்து அணியின் தேசிய கீதத்தை ஒலிக்க செய்தார். இந்திய தேசிய கீதம் ஒலித்த போது ரசிகர்கள் ஆக்ரோசமாக கத்தினர். பாகிஸ்தான் மைதானத்தில் இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.