இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!
'நாசா' எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன்ஸ் பேஸ் எக்ஸ் நிறுவனம் கைகோர்த்துள்ளது. இவை இணைந்து, 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் வீரர்களை அனுப்ப உள்ளது. அந்த வகையில், கடந்த மே 29ம் தேதி புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் செல்ல இருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், ஜூன் 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் விண்வெளி பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பிறகு இறுதி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, ஜூன் 19ம் தேதி (நாளை) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வானிலை மாற்றம், வீரர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்திய விண்வெளி வீரர் சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஆக்ஸிம்-4 பயணம் வருகிற ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவரான சுபான்ஷு சுக்லாவுடன் போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோரும் விண்வெளிக்குச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.