13 மீனவர்கள் கைது விவகாரம் : இலங்கை தூதருக்கு இந்தியா சம்மன்!
எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் இன்றும் 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த ஆனந்தவேலு என்பவருக்கு சொந்தமான படகில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் சிறை பிடித்தனர். அவர்களின் படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்களை சிறைப்பிடித்த போது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டது தவறு என இந்திய வெளியுறவுத் துறை இலங்கை தூதரிடம் கடும் எதிர்ப்பை முன்வைத்துள்ளது. “மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே மீனவர்கள் விவகாரத்தை கையாள்ள வேண்டும் என்பதில் இந்தியா திட்டவட்டமாக உள்ளது.
மீனவர்கள் விவகாரத்தில் இருநாடுகள் இடையே ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தங்களை கட்டாயம் முறையாக கடைபிடிக்க வேண்டும். மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது எந்த சூழலிலும் ஏற்புடையது அல்ல” என இலங்கை தூதரிடம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.