இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனை....பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஐ.நா. அறிவுறுத்தல்!
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குக்தலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து, அட்டாரி - வாகா எல்லையை மூடியது. பாகிஸ்தான் குடிமக்களுக்கான விசாக்களையும் இந்தியா ரத்து செய்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்ததோடு சிம்லா ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. மேலும் சிந்து நதி நீரைத் தடுப்பது போர் அறிவிப்பாகக் கருதப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் முப்படைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது.
இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான சூழ்நிலை மிகவும் கவலையளிப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தை தனித்து பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.