கர்நாடகாவில் பணி நேரம் அதிகரிப்பு - தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!
சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு ஐடி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961, பிரிவு 7-ன் படி, ஒரு நாளைக்கு வேலை நேரம் 9 மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்றும் அதிகபட்ச கூடுதல் நேர நேரம் 10 மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்றும் கூறுகிறது. மேலும் இந்தச் சட்டம் மூன்று மாதங்களுக்கு கூடுதல் நேர வேலையில்(OT) அதிகபட்சமாக 50 மணிநேரம் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.
இந்த சட்டத்தை மாற்றியமைக்கும் வகையில் கர்நாடக அரசு, ஒரு நாளைக்கான வேலை நேரத்தை 10 மணி நேரமாகவும், அதிகபட்ச கூடுதல் நேரத்தை ஒரு நாளைக்கு 12 மணி நேரமாகவும் நீட்டிக்க முயல்கிறது. மேலும், மூன்று மாதங்களில் கூடுதல் நேர வேலை வரம்பை 50 முதல் 144 மணி நேரமாக அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில அமைச்சர் கே.பார்த்தசாரதி, முன்பு பெண்கள் இரவுப் பணிகளில் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை, ஆனால் இப்போது அவர்கள் சம்மதத்துடன் போக்குவரத்து வசதி, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் வேலை செய்யலாம் என்றும் இது அவர்களுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிப்பதுடன் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் இந்த நிலைபாட்டை, அம்மாநில CPI இன் மாநிலச் செயலாளர் K. ராமகிருஷ்ணா, மத்திய மற்றும் மாநில அரசுகள் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக பல தொழிற்சங்கங்களும் அம்மாநிலத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.