பாகிஸ்தானுக்கு நிதி வழங்க 11 புதிய நிபந்தனை - ஐஎம்எப் உத்தரவு!
நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து முதல் தவணையாக 110 கோடி டாலர் பாகிஸ்தானுக்கு ஏற்கனவே விடுவிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானுக்கு 2வது தவணையாக 8ஆயிரத்து 670 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக ஐ.எம்.எப். அறிவித்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கும் முடிவை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம் அடுத்த தவணையை விடுவிக்க பாகிஸ்தானுக்கு கூடுதலாக 11 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியானது. அதில்,
"மூன்று ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட கார்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்.
17.6 டிரில்லியன் ரூபாய் பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தரவேண்டும்.
ஆண்டுக்கு 2 முறை எரிவாயு விலையை உயர்த்த வேண்டும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் உற்பத்தி செய்ய ஆகும் செலவுக்கு இணையாக எரிவாயு விலையை உயர்த்த வேண்டும்.
மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவை வசூலிக்கும் வகையில் இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதிக்குள் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும்.
2027-ம் ஆண்டுக்குப் பிறகு நிதியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த அறிக்கையை உருவாக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு நிர்வாக செயல்திட்டத்தை வெளியிட வேண்டும்.
வரி செலுத்துவோர்களை அடையாளம் காண்பது, பதிவு செய்வது, உரிய வரி வசூலிப்பது விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள தனித்தனியாக 4 குழுக்கள் ஜூன் மாதத்துக்குள் அமைக்க வேண்டும்.
தொழில்துறை எரிசக்தி பயன்பாட்டை தேசிய மின் கட்டமைப்புக்கு மாற்றும் வகையில் மே மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்.
மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.3.21 என்ற உச்சவரம்பை ஜூன் மாதத்துக்குள் நீக்க சட்டம் இயற்றப்பட வேண்டும்.
2035-ம் ஆண்டுக்குள் தொழி்ல்துறை பூங்காக்கள் மண்டலங்களுக்கான அனைத்து நிதி சலுகைகளையும் நீக்குவதற்கு இந்தாண்டு இறுதிக்குள் பாகிஸ்தான் ஒரு மாற்று திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
ஐஎம்எப் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி 2026-ம் நிதியாண்டின் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெற வேண்டும். வரும் ஜூன் மாதத்துக்குள் அதை செய்து முடிக்க வேண்டும்".
இந்த புதிய நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றால் நிதியுதவியின் அடுத்த கட்ட தொகுப்பு விடுவிக்கப்படாது என பாகிஸ்தானுக்கு ஐஎம்எப் எச்சரிக்கை விடுத்துள்ளது.