சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ சரணடைவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் சிறை தண்டனை பெற்ற சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா சரணடைவதற்கான காலத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1997 - 2000ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக 1.55 கோடி பணம் பெற்றதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது.
இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கும் 2017ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாக ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
அதேவேளையில், இந்த தண்டனையை எதிர்த்து மனுதாரர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக ஒரு மாத காலத்துக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் கடந்த மார்ச் 14ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில் ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் சரணடைய விதித்திருந்த காலக்கெடுவும் முடிவடைந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் வரை சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி ஆகியோர் சரணடைய ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்