இசையமைப்பாளர் ஆனார் இளையராஜாவின் பேரன்!
இளையராஜா மூத்த மகனான கார்த்திக்ராஜாவின் மூத்த மகன் யத்தீஸ்வர். இவரும் தாத்தா, அப்பா, சித்தப்பா, அத்தை பாணியில் இசை மீது ஆர்வம் கொண்டவர். தனது பேரன் குறித்து சில பேட்டிகளில் இளையராஜாவும் பெருமையாக பேசி இருக்கிறார். இந்நிலையில், திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் தான் இசையமைத்து பாடிய ஓம் நமச்சிவாய என தொடங்கும் பாடலை, யத்தீஸ்வர் வெளியிட்டுள்ளார்.
தாத்தா மாதிரி பேரனும் சிவன் மீது பக்தி கொண்டவர் என்பதால் முதல் பாடலை கடவுளை போற்றி பாடும் பாடலாக இசையமைத்துள்ளார். இளையராஜாவுக்கு மிகவும் விருப்பமான, அடிக்கடி அவர் செல்லும் திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்திலேயே தனது முதல் பாடலை அவர் சென்டிமென்ட்டாக வெளியிட்டு இருக்கிறார்.
ரமண ஆசிரம நிர்வாகிகளே இந்த பாடலை வெளியிட்டு இருக்கிறார்கள். தனது இசைப்பயணம் குறித்து பேட்டி அளித்துள்ள யத்தீஸ்வர், "எனக்கு சின்ன வயது முதலே இசை மீது ஆர்வம். முதல் பாடல் பக்தி பாடலாக இருக்க வேண்டும் என நினைத்தேன். இந்த பாடல் குறித்து சில ஆலோசனைகளை தாத்தா இளையராஜாவிடம் கேட்டேன். அவரும் ஆர்வமாக வழங்கினார். அப்பா கார்த்திக்ராஜா பாடல் வரிகளில் உதவினார். எனக்கும் தாத்தா, அப்பா, வரிசையில் சினிமாவில் இசையமைக்க ஆர்வம் இருக்கிறது. நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’’ என்றார்.
ஒரே குடும்பத்தில் தாத்தா, மகன், பேரன் என 3பேரும் இசையமைப்பாளராக இருப்பது என்பது அபூர்வம். அது, இசைஞானி குடும்பத்தில் நடந்து இருக்கிறது. தவிர, அவர் குடும்பத்தில் கங்கை அமரன், யுவன்ஷங்கர்ராஜா, பிரேம்ஜிஅமரன் ஆகியோரும் இசையமைப்பாளர்களே. இளையராஜாவின் மகள் மறைந்த பவதாரணியும் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். அந்த வரிசையில் யத்தீஸ்வரும் இளையராஜா குடும்பத்தில் இருந்து வந்துள்ளார்.
யத்தீஸ்வர் தந்தையான கார்த்திக்ராஜாவும் சிறுவயதிலேயே இசைத்துறைக்கு வந்தவர். பாண்டியனின் ராஜ்ஜியத்தில் பாடல் அவர் இசையமைத்த முதல் பாடல். பின்னர். விஜயகாந்த் நடித்த அலெக்சாண்டர், ராஜ்கிரண் நடித்த மாணிக்கம் படங்களின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். டும்டும், உள்ளம் கொள்ளை போகுதே, நாம் இருவர் நமக்கு இருவர், ஆல்பம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசைமைத்தவர். அந்தவகையில் அப்பாவை போல சின்ன வயதிலேயே யத்தீஸ்வர் இசையமைப்பாளர் ஆனது குறிப்பிடத்தக்கது.
மகன் குறித்து பேசிய கார்த்திக்ராஜா, ‘‘திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றபோது பக்திபாடல்களை கேட்ட யத்தீஸ்வர் அது போல பாடல் உருவாக்க ஆசைப்பட்டார். உன் விருப்பம் என்றேன். இந்த பாடலை தந்து இருக்கிறார். எங்கள் குடும்பத்தில் அவர் இசையமைப்பாளர் ஆனது சந்தோஷம், பெருமை. ஒரு பக்கம் பயமாகவும் இருக்கிறது. இங்கே மக்கள்தான் நீதிபதி. இந்த பாடலை கேட்டு விட்டு அவரை வாழ்த்த வேண்டும்’’ என்றார்
- மீனாட்சிசுந்தரம், சிறப்பு செய்தியாளர்