“மன்னிப்பால் இரு மாநிலங்கள் ஒற்றுமைப்படும் என்றால் மன்னிப்பு கேட்கலாம்” - கமல்ஹாசன் விவகாரத்தில் திலகபாமா கருத்து!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாமக பொருளாளர் திலகபாமா நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,
“தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என கமல்ஹாசன் பேசியது, அரவணைக்கும் போக்கில்தான் அவர் பேசியுள்ளதாக நான் பார்க்கிறேன். எனது மொழியை நான் பாராட்டுகின்ற நேரத்தில், பிற மொழிகளை குறைத்து மதிப்பிடுவது போல ஒரு சொற்றொடர் வந்தால், அதனால் அந்த மொழியை சார்ந்தவர்களோ, இனத்தைச் சார்ந்தவர்களோ காயம் பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதில் ஒரு பிரச்சனையும் இல்லை. இதில் ஈகோ தேவையில்லை.
எல்லா மொழிகளுக்குமான புரிதலோடுதான் நடிகர் கமல்ஹாசன் இருப்பார் என நம்புகிறேன். கமல்ஹாசன் மொழி குறித்த பேச்சை நான் சரியாகத்தான் பார்க்கிறேன். தமிழ் மொழியினுடைய வேர்ச்சொல் எல்லா மொழியிலும் பரவி கிடக்கிறது. தாழ்கிறவன் எப்பொழுதும் தாழ்ந்து போவதில்லை. தான் சொல்கின்ற வார்த்தையில் இன்னொருவர் காயப்பட்டு இருக்கிறார் என புரிந்து கொண்டோமானால் அந்த மன்னிப்பை அவர்களிடம் கொடுத்துவிட்டு செல்வது, அது காயத்திற்கு மருந்தாக அமையும்.
மன்னிப்பு கேட்பதால் இரு மாநிலங்கள் ஒற்றுமைப்படும் என நினைத்தால், கமல்ஹாசன் அந்த மன்னிப்பை கேட்பதன் மூலம் அவர் இன்னும் உயர்வாக கருதப்படுவார்” என தெரிவித்தார்.