“அன்பை இரட்டிப்பாக திருப்பி தர இன்னும் அதிகமாக உழைப்பேன்” - நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!
நடிகர் சிவகார்த்திகேயனின் தனது 40வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதனை முன்னிட்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘மதராஸி’ படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகெண்ட் லுக், டைட்டில் க்ளிம்ஸ் ஆகியவை நேற்று வெளியானது. அதே போல் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் மேக்கிங் வீடியொ வெளியானது. இதற்கிடையில் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“என்னுடைய பிறந்த நாளில் பேரன்பை வாழ்த்துகளாக தெரிவித்து அதை மறக்கமுடியாத நாளாக மாற்றிய அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும். பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி, இணையதள, சமூக ஊடகங்கள், பண்பலை, நண்பர்களுக்கும், அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.
"மதராஸி " படத்தின் முன்னோட்டத்தினை வெளியிட்ட படகுழுவிற்கும் அதற்கு அனைவரும் அளித்த பேராதரவிற்கும் நன்றி. தற்போது படப்பிடிப்பில் உள்ள "பராசக்தி " படகுழுவின் வாழ்த்துகளுக்கும் அன்பிற்கும் எனது மனமார்ந்த நன்றி.
எனது அன்பு ரசிகர்களான சகோதர, சகோதரிகள். சமூக ஊடகங்களில் அன்பையும் வாழ்த்துக்களையும் நிரப்பியதோடு, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் எனது முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தர முன்பைவிட இன்னும் அதிகமாக உழைப்பேன்”
இவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.