“மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு பிரச்சாரம்” - நடிகர் வையாபுரி பேட்டி!
“வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சூட்டிங் இல்லாமல் இருந்தால், வாய்ப்பு கிடைக்குமேயானால் அதிமுகவிற்காக தேர்தல் பிரச்சாரம் செய்வேன்” என நடிகர் வையாபுரி தெரிவித்துள்ளார்.
மதுரை அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் மூலம் கொரோனா காலகட்டத்திலிருந்து மதுரை ரயில்வே நிலையம், அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு ஒரு வேளை உணவாக மதிய உணவு கடந்த ஆயிரம் நாட்களுக்கு மேல் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் 1050 வது நாளை நெருங்கப் போகிறது. இந்நிலையில் இன்று 1039 வது நாளை முன்னிட்டு, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகே இருக்கக்கூடிய பூங்கா முருகன் கோவில் வாசலில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் மூலம் வழங்கக்கூடிய உணவை நடிகர் வையாபுரி வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“உணவில்லாதவர்களுக்கு ஒருநேரம் உணவாவது மக்கள் கொடுக்க வேண்டும். அந்த வகையில் இந்த அட்சய பாத்திர டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு கோவிட் காலம் தொட்டு தற்போது வரை இந்த மக்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கி வருகிறார். அது பாராட்டுதலுக்குரியது. மனிதர்களாகிய நாம் ஒருவேளை உணவாவது பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திரைப்பட சூட்டிங் இல்லாமல் இருந்தால், வாய்ப்பு கிடைக்குமேயானால் நிச்சயம் ஒரே கட்சி ஒரே கொள்கை என்று இருக்கக்கூடிய அதிமுகவிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு நான் வருவேன்.
தற்போது உள்ள சூழலில் வில்லன் மற்றும் கதாநாயகியின் தந்தையாக அதுபோன்ற
கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்தி வருகிறேன். படப்பிடிப்பு இல்லையென்றால் நிச்சயமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். வில்லன்கள் காமெடியன் ஆகி விட்டார்கள். காமெடியர்கள் வில்லன்கள் ஆகி விட்டனர். இந்த நிலையில் கதாநாயகனாக நடிப்பதற்காகவே அனைவரும் திரையுலகத்திற்குள் வருகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் கதாநாயகனாக நடிப்பேன். நடிகர் சங்க கட்டிடம் குறித்த கேள்வியை நடிகர் விஷாலிடம் தான் கேட்க வேண்டும். கஞ்சா கடத்தல் குறித்து அனைவரும் பேசிய நிலையில், நான் அது குறித்து பேசுவது சரியாக இருக்காது” என தெரிவித்துள்ளார்.