“தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” - தவெக தலைவர் விஜய்!
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு வேண்டி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய தவெக-வினர் கைது செய்யப்பட்டது கண்டிக்க தக்கது என்றும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தவெக மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர்.
தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருப்பதால்தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது. ஆனால், தமிழ்நாடு மக்கள் தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழ்நாடு அரசு, தவெக மகளிர் மற்றும் தொண்டர்களை கைது செய்திருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்”
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.