விஜயகாந்த் பெயரை எப்போதும் ஞாபகம் வைத்திருப்பது போல் நல்ல செய்தி வரும் - நடிகர் சூர்யா!
விஜயகாந்த் பெயரை எப்போதும் ஞாபகம் வைத்திருப்பது போல் நல்ல செய்தி நடக்கும், விரைவில் அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன் என நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : ஜன.9-ல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் – போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி ஆகியோர் நேற்று சென்றனர். முன்னதாக, விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.
இந்த நிலையில், விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் சூர்யா மலர்தூவி கண்ணீர் மல்க இன்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;
"பெரியண்ணா படப்பிடிப்பு தளத்தில் என்னை அக்கறையுடன் பார்த்துக் கொண்டார். விஜயகாந்த் மறைவு ஈடு செய்ய முடியாதது. இறுதி அஞ்சலியில் நான் அவரை பார்க்க முடியாதது ஈடுசெய்ய முடியாத பெரிய இழப்பு. நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் விஜயகாந்துக்கு பெரிய பங்கு உள்ளது.
அனைவரும் கோரிக்கை விடுத்தது போல் அவருக்கு மணிமண்டபம், சிலை அமைப்பது மற்றும் நடிகர் சங்க கட்டடத்திற்கு அவரது பெயரை வைப்பது குறித்து அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.
ஆரம்ப காலத்தில் அவருடன் இருந்த நாட்களில் சகோதரன் போல் உரிமையாக பேசியது மறக்கவே முடியாது. அவர் கற்றுக் கொண்டதை இப்போது வரை கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன். கை வைத்த நாற்காலியில் அமர வேண்டாம். கட்டை நாற்காலியில் அமருங்கள் என்று சொன்னது போல் அவர் ஞாபகமாக இன்று வரை எந்த படபிடிப்பு என்றாலும் அது போன்ற நாற்காலி இருக்கும். பெரிய நட்சத்திரங்கள் உங்களிடம் பழக ஒரு தடை இருக்கும் அதை உடைத்தவர்.
அவர் பெயரை எப்போதும் ஞாபகம் வைத்திருப்பது போல் நல்ல செய்தி நடக்கும், விரைவில் அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன். அவரின் தொண்டர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு நடிகர் சூரியா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.