“பேசுவதற்கு நான் பேச்சாளன் இல்லை”- இசையமைப்பாளர் இளையராஜா பேச்சு!
இசைஞானி இளையராஜாவுக்கு ரோட்டரி கிளப்பின் உயரிய விருதான தொழில் சிறப்பு விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த ரோட்டரி சங்கத்தின் விழாவில் கலாச்சாரத்திற்கும் இசைக்கும் இசையமைப்பாளர் இளையராஜா செய்த ஈடுஇணையற்ற பங்களிப்பை பாராட்டி விருது அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இளையராஜா பேசியதாவது,“பேசுவதற்கு நான் பேச்சாளன் இல்லை. நான் பாட்டாளி, பாட்டாளி என்றால் பாட்டுபாடுபவர், அவர்கள் படும்பாடு என்பது வேறு, அவர்கள் பாடு வேறு. என் பாடு பாட்டாகிறது. கோவையில் எனது காலடி படாத தெருக்களே இல்லை ஒவ்வொரு தெருவிலும் எனது ஆர்மோனியம் ஒருகாலத்தில் ஒலித்திருக்கிறது.
என் காலடி பட்ட கோவை வேறு. இன்றைக்குள்ள கோவை வேறு நான் வைத்துள்ள ஆர்மோனியம் கோவையில் செய்தது. இதுவரை அந்த ஆர்மோனியத்தை தான் பயன்படுத்தி வருகிறேன், கோவையையும், என்னையும் பிரிக்க முடியாது” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.