“விஜயகாந்த் கோபத்தின் ரசிகன் நான்...” - மநீம தலைவர் கமல்ஹாசன் உருக்கம்!
சென்னை தீவுத் திடலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்த்தின் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தி, நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை 9:30 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதன் பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் உடல் இன்று அதிகாலை 4 மணி அளவில் தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக காலை 6 மணியளவில் கொண்டு வரப்பட்டது. இன்று பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு இன்று மாலை 4:45மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
"எளிமை, நட்பு, உழைப்பு, பெருந்தன்மை இவ்வாறு அத்தனை வார்த்தைகளும் சேர்த்து ஒரே மனிதரை சொல்லவேண்டும் என்றால் அது விஜயகாந்த்தை சொல்லலாம். அவர் நட்சத்திர அந்தஸ்து வருவதற்கு முன்பு அவர் எப்படி பழகினாரோ, அதேபோல் இறுதி வரை என்னிடம் பழகினார். எந்த அளவிற்கு அவரிடம் பணிவு இருக்கிறதோ, அதே அளவு நியாயமான கோபமும் இருக்கும். அவரது கோபத்தின் ரசிகன் நான். அதனால் தான் அவர் மக்கள் பணிக்கே வந்துள்ளார்.
இப்படிப்பட்ட நேர்மையானவர்களை இழந்திருப்பது ஒருவித தனிமை தான் என்னை போன்றவர்களுக்கு. இவரை போன்றவர்கள், இவர்களது ரசிகர்களை இவர்கள் போலவே உருவாக்கியிருப்பார்கள்..." இவ்வாறு அவர் பேசினார்.