தட்கல் முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி?
தட்கல் டிக்கெட் முன்பதிவு நடைமுறையை மேம்படுத்தும் நோக்கில், இ-ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கி இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 3ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் வெளியிட்ட இந்த மாற்றமானது, உண்மையான பயனர்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை திறம்பட பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை பயணிகளிடையே நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே வரும் ஜூலை 1ம் தேதி முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையில் மட்டுமே தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற முடியும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, ஐஆர்சிடிசி இணையதள கணக்குகளை வைத்துள்ள பயனாளர்கள் தங்களது ஆதாரை இணைக்க ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம், ஒவ்வொரு பயனருக்கும் மின்னஞ்சல் மூலம் குறுந்செய்தி அனுப்பி உள்ளது.
அதன்படி, ஐஆர்சிடிசி இணையதள கணக்கு வைத்துள்ள பயனாளர்கள் தங்களது யூசர் ஐ.டி. (பயனாளர் கணக்கு) மற்றும் பாஸ்வேர்டு மூலம் ஐஆர்சிடிசி முன்பதிவு இணையதளத்துக்குள் சென்று 'மை அக்கவுன்ட்' என்ற தலைப்பின் கீழ் இருக்கும் 'ஆத்தென்டிகேட் யூசர்' (பயனாளரை அங்கீகரிக்கவும்) என்பதை தேர்வு செய்து ஆதார் அட்டையில் இருப்பது போன்று பெயரை பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்த பின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போனுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். அந்த ஓடிபியை பதிவு செய்ததும் ஐஆர்சிடிசி இணையதளத்துடன் ஆதார் இணைக்கப்படும். ஆதார் அட்டையில் இருக்கும் பெயரும், இணையதளத்தில் பதிவு செய்யும் பெயரும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே ஆதார் இணைக்கப்படுகிறது. கடைசி நேர சிக்கலை தவிர்க்க பயனாளர்கள் தங்களது இணையதள கணக்குடன் ஆதாரை முன்கூட்டியே இணைக்க ஐஆர்சிடிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.