அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிரான ஹேமந்த் சோரனின் மனு - நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
அமலாக்கத்துறையினரின் கைது நடவடிக்கையை எதிர்ந்து ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது
ஜார்க்கண்டில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார். இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இறுதியில் கடந்த 20ம் தேதி அமலாக்கத்துறை முன் ஹேமந்த் சோரன் ஆஜரானார். அவரிடம் வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 36 லட்ச ரூபாய் பணம் மற்றும் பி.எம்.டபிள்யூ. கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படியுங்கள்: “சாதி, மதம் அற்றவர் சான்றிதழை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை” – உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், அமலாக்கத்துறை மீது முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். டெல்லியில் உள்ள தனது வீட்டில் அமலாக்கத்துறை சட்டவிரோதமாக சோதனை நடத்தி பொருட்களை எடுத்துச் சென்றதாக ஹேமந்த் சோரன் புகார் அளித்தார். புகாரின் பேரில் அமலாக்கத்துறை மீது ஜார்க்கண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் ஹேமந்த் சோரன். பின்னர் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனை அடுத்து ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பான சூழலில் ஹேமந்த் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அமலாக்கத்துறையில் கைது நடவடிக்கையை எதிர்ந்து ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஹேமந்த் சோரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் ஹேமந்த் சோரன் சார்பில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு வாபஸ் பெறப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த மனுவை நாளை விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜோசி பார்திலாலாஇ மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்பு ஒப்புக் கொண்டது.