ஆங்கில பாட நூல்களுக்கு இந்தியில் தலைப்பு - சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!
நவோதயா பள்ளிகளில் உள்ள ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கு இந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட சிபிஎஸ்இ பாட புத்தகங்களில், ஆங்கில வழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான புத்தகங்களின் தலைப்பு “ம்ருதங்”, “சந்தூர்”, “கணித பிரகாஷ்” என்று இந்தி மொழிக்கு மாற்றப்பட்டு விட்டது.
இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஆங்கில புத்தகங்களின் தலைப்பை இந்தியில் மாற்றியதற்கு கேரள அமைச்சர் சிவன் குட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி பெயர் வைத்ததை என்சிஇஆர்டி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,
“ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி!. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி!. என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம். பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு.
இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா?.” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.