தாலியை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
இலங்கையைச் சேர்ந்த தனுஷிகா என்பவர் 2023ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஜெயகாந்த் என்பவரை, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.
பிரான்சில் வசித்து வந்த ஜெயகாந்த், மனைவிக்கு விசா பெரும் வரை அவரை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். விசா பெற்றதை அடுத்து சென்னை திரும்பிய தன்ஷிகாவை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அவர் அணிந்திருந்த வளையல், தாலி சங்கிலி உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பி அவற்றை பறிமுதல் செய்தனர். இந்த நகைகளை திருப்பித் தர உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தன்ஷிகா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நமது மரபுப்படி அதிக இடையில் தாலி சங்கிலி அணிவது வழக்கம். இந்த மரபுகளுக்கு அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும். கணவருடன் இன்னும் மண வாழ்க்கையை துவங்காத பெண்ணின் தாலி சங்கிலியை அகற்றிய செயல் நியாயமற்றது எனக் கூறி நகைகளை திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டார்.
பயணிகள் அணிந்திருக்கும் தங்க நகைகளுக்கு சுங்க வரி சட்டத்தில் விலக்கு அளித்துள்ள நிலையில், தாலிச் சங்கிலி பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சுங்கத்துறை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.