மாடர்ன் பண்டதலூன் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல்: பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
மகாராஷ்டிராவில் நடைபெறும் மாடர்ன் பண்டதலூன் போட்டியில் பங்கேற்பதற்கான தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் பட்டியலை தயார் செய்து அனுப்ப உத்தரவிட கோரிய வழக்கில், பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை தியாகராஜா நகரை சேர்ந்த ஜெயச்சந்திரன், அவரது மகன் ஆகாஷ் கிருஷ்ணன் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,
“எனது மகன் மாடர்ன் பண்டதலூன்(MODERN PENTATHALON) எனும் விளையாட்டில் ஆர்வமுடையவர். இ ந்த விளையாட்டு ஒலிம்பிக்கிலும் இடம்பெற்றுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியதால், பள்ளிகளுக்கான விளையாட்டு பெடரேஷனால் நடத்தப்படும் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
இம்முறையும் அதிகாரிகள் இதுபோல அலட்சிய போக்கை கையாள்வது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடைபெறும் 67ஆவது தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான விளையாட்டு வீரர்களின் பட்டியலை தயார் செய்து, அதற்கான இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “பாண்டதலூன் விளையாட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அல்ல” என தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் மனுதாரரை எவ்வாறு அந்த விளையாட்டில் பங்கேற்க அனுமதிப்பது? Wild card entry போல ஏதேனும் முறைகள் உள்ளதா? என்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர், பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை செயலருடன் ஆலோசித்து அதை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.