ஈரோடு | 10,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்... விவசாயிகள் வேதனை!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதையும் படியுங்கள் : அடுத்த 2 மணி நேரம்.. சென்னை உள்பட 13 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
குறிப்பாக, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. இதற்கிடையே, கருங்கரடு, புதுக்கரைப்புதூர் ஆகிய பகுதிகளில் நெல் பயிர்கள் விளைவிக்கப்பட்டு நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது.
இதனால், கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 10,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமானது. அதில் உள்ள நெல் பயிர்கள் முளைத்து வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நெல் கொள்முதல் நிலையங்களில் தார்பாய் போன்ற எந்த வசதிகளும் ஏற்படுத்தி தருவதில்லை எனவும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தப்படுவதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.