தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை!
தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று (மே 15) தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (மே 16) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பநிலை
மே 15 முதல் 19ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்கும்.
வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 37-39 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-37 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31-36 டிகிரியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மீனவர்கள் மே 15,16 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்க்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாள்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.